Thursday, 2 February 2023

மிஷன் இயற்கை - WWF - உலக ஈர நாள் விழிப்புணர்வு வினாடி வினா

 ஈரநிலங்களைப் பாதுகாப்பதன் மூலம் பல்லுயிர் வளங்கள் மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப் படவேண்டும் என்று  பிப்ரவரி மாதம் 2ந்தேதி  1971ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின் கரீபியன் கடற்பகுதியில் ராம்சர் என்னுமிடத்தில் ஈரநிலங்களைப் பாதுகாத்தல் சம்பந்தமாக நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. “நீடித்த நகர்ப்புற எதிர்காலத்திற்கான ஆதாரம் – ஈரநிலமே” 

ஈரநிலம் என்றால் என்ன?

ஈர நிலங்கள் உயிரினங்களின் பல்வகைமைத் தன்மையைக் கொண்டிருப்பதனால் ‘நகரங்களின் பச்சை நுரையீரல்கள்’ என அழைக்கப்படுகின்றன. சேத்து நிலம் என்றும் சகதி என்றும் மக்களால் அசௌகரியமாக அழைக்கப்பட்டுக் கழிவுகள் கொட்டுகின்ற இடமாக மாறிக் கொண்டிருக்கின்ற இடங்களுக்கு ஈரநிலங்கள் என்று பெயர் அதாவது குட்டை, குளம், ஏரி, போன்றவையே.

தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ நீரால் மூடப்பட்டிருக்கும் இடங்கள் ஈர நிலங்கள் ஆகும். சேற்றுநிலம், சகதி, முற்றா நிலக்கரியுள்ள நிலம், நீர்நிலைகள் ஆகியவை ஈர நிலங்கள் எனப்படும். நீர் நிலைகள் இயற்கையாக அல்லது செயற்கையாக அமைந்தவையாகவோ, நிலையான, அல்லது பாயும் நீரைக் கொண்டவையாகவோ நிரந்தரமானவையாகவோ, தற்காலிகமானவையாகவோ, நன்னீரை அல்லது உப்புநீரை உடையவையாகவோ இருக்கலாம்.

ஈரநிலங்கள் மூன்று பிரிவுகள் கொண்டது

 சலசலக்கும் அருவிகள், பெருகி ஒடும் ஆறுகள் சமுத்திரமாக காட்சியளிக்கும் குளங்கள். உள்ளடங்கலாக உள்நாட்டு இயற்கையான நன்னீர் ஈரநிலங்கள்.
 பொங்கு முகங்கள் வெண்மணற் பரப்பில் அலைமோதும் கடற்கரைகள், அழகிய தீவுக் கூட்டங்கள், ஆழமற்ற விரிகுடாக்கள், கடல்நீரேரிகள், கற்பாறை கடற்கரைகள் உள்ளடங்கலான கடல் மற்றும் உப்புநீர் ஈரநிலங்கள்.
 பனிபடர்ந்தாற் போல் காட்சியளிக்கும் உப்புப்பாத்திகள், பச்சைப் பசேலென்ற நெல் வயல்களும், வயல்களுக்கு நீர் தரும் நீர்த் தேக்கங்கள் உள்ளடங்கலாக மனிதனால் உருவான ஈரநிலங்கள்.

ஈரநிலங்களின் பயன்கள்

• சூழலியல், பொருளாதார சமூக ரீதியில் மனிதனுக்கு மறைமுகமாக பங்களிப்பினை வழங்குகின்றன.
• அதிக மழை கிடைக்கும் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் பாதுகாக்கின்றன.
• கட்டுக்கடங்காது காட்டாறாக பெருகி ஓடும் ஆறுகளை அடக்கியாண்டு குளங்களில் தேக்குவதும், வயல் நிலங்களில், வெள்ளச் சமவெளிகளில் பாய்ந்து அமைதியடைவதும் சதுப்பு நிலங்களில் வடிமானம் அடைய வைப்பதும் இந்த நிலங்களே.
• ஆற்றுப் பெருக்குக் காலங்களிலும், கடலலை செயற்பாடுகளின் போதும் சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளின் போதும் கடற்கரை அரிப்புச் செயற்பாடுகளை சதுப்புநில தாவரங்களாலும், கற்பாறைத் தொடர்களாலும் நுரை போட்டு வரும் ஆக்ரோஷ அலைகளினை தடைபோட்டு நிற்பதுவும் இவ் ஈரநிலங்களே.
• வண்டல் கலந்த நீரானது ஈரநிலங்களினூடாக செல்கின்ற போது கடற்கரை சதுப்புநிலத்தாவரங்கள் போன்றவற்றால் தடுக்கப்பட்டு வண்டல்களை படிய வைக்கின்றன.
• புயற்காலங்களில் ஏற்படும் கரையோர மண் அரிப்பை தடுக்கின்றது.
• நீரை தூய்மையாக்குதல் இந்த நிலங்களின் முக்கியபயனாகும். மேற்ப்பரப்புநீர்களில் கரைந்துவரும் ரசானங்களை நீக்கும் ஒரு வடிகட்டியாக இது செயல்பட்டு தரைக்கீழ் நீரின் தரத்தை பாதுகாக்கிறது.
• ஒரு பிரதேசத்தின் இடம்சார் காலநிலை (வுழிழ- ஊடiஅயவந) நுண் காலநிலை (ஆiஉசழ ஊடiஅயவந) ஆகியவற்றின் தன்மைகளை பேணுவதிலும் இவை முக்கியமான பங்களிப்பினையே செய்கின்றன. இதனால் மிதமான வெப்பநிலை நிலவுவதற்கும் மனித சௌகரிய நிலையை ஏற்படுத்தவும் இவை காரணமாகின்றன.
• விவசாய உற்பத்திகளையும் நீர்ப்பாசன தேவைகளையும், குடிநீரையும் பெற்றுக் கொள்ள குளங்கள், நீர்த் தேக்கங்கள் என்ற பெயரிலும் நீர் மின்சாரத்தை பெறுவதில் என பயன்படுகிறது.
• கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களாக விளங்குகின்றது.
• மீனினங்களின் இனவிருத்திக்கு ஏற்ற இடங்களாக உள்ளதோடு மீன்பிடி, உப்பு உற்பத்தி போன்றவைற்றில் கடல்சார் மற்றும் களப்பு, கடல்நீரேரிகளாவும்.

உலக அளவில்

உலகினது அனைத்துப்பகுதிகளிலும் ஈரநிலங்கள் காணப்பட்டாலும் ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும், அமேசான் அண்டிய பிரேசில் பகுதிகளில் முக்கியமான ஈரநிலங்கள் காணப்படுகின்றது, உலகில் ஏறக்குறை 1112 ஈரநிலப்பகுதிகள் காணப்படுவதுடன் அவை மொத்தமாக 89.37 மில்லியன் ஹெக்டேர் நிலப்பகுதிகளைக் கொண்டிருக்கின்றன.

இந்தியா அளவில்

இந்தியாவில் 27,403 சதுப்பு நிலங்கள் உள்ளன இதில் 23,444 சதுப்பு நிலங்கள் உள்பகுதியில் அமைந்துள்ளன. 3,959 சதுப்பு நிலங்கள் மேற்கு வங்கம், ஒரிசா, ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம், கோவா, மகாராஷ்டிரம், அந்தமான் – நிகோபார் தீவுகள் உள்ளிட்ட மாநிலங்களின் கடலோரங்களில் அமைந்துள்ளன. இதன் பரப்பு 6,750 சதுர கிலோ மீட்டர். இதில் 80 சதவீத சதுப்பு நிலங்கள் அலையாத்திக் காடுகளாக உள்ளன.
ஆசிய சதுப்பு நில இயக்ககத்தின் அறிக்கையில், இந்தியாவில் மொத்தம் உள்ள நிலத்தில் 18.4 சதவீதம் சதுப்பு நிலங்களாக உள்ளன. 70 சதவீத சதுப்பு நிலங்கள் நெல் சாகுபடி உள்ளிட்ட தேவைகளுக்காக விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது. உணவு உற்பத்தியைக் காரணம்காட்டி விவசாய நிலங்களாக மாற்றப்பட்டதே சதுப்பு நிலங்கள் குறைய முக்கியக் காரணமாக உள்ளது. 19 இடங்களில் சதுப்பு நிலங்கள் பறவைகள் சரணாலயங்களாக அறிவிக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்பு, மேம்பாட்டுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் மொத்த சதுப்பு நிலங்களில் 50 சதவீதம் மட்டுமே தற்போது உள்ளது. இவையும் ஆண்டுக்கு 4,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு வீதம் குறைந்து வருகின்றன. இதன் மூலம் மொத்த சதுப்பு நிலங்களில் ஆண்டுக்கு 3 சதவீதம் இழப்பு ஏற்படுகிறது என ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரியில் உள்ள ஈர நிலப்பகுதிகள்

தேங்காய்த்திட்டு சதுப்பு நிலக் காடு உப்பனாறு முகத்துவாரத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மாங்குரோவ் என அழைக்கப்படும் சதுப்பு நில தாவரங்கள் செழித்து வளர்ந்துள்ள பகுதியாகும். இவை, கடல் அலை சீற்றத்தை தடுத்து நிறுத்துவதால், அலையாத்தி காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. சுனாமி பேரழிவின்போது, சதுப்புநில காடுகளின் முக்கியத்துவம் தெரிந்து, கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு, மாங்குரோவ் வகையில் அவசினியா, ரைசோபோரா என்ற இரண்டு வகையான செடிகள், உப்பனாறு முகத்துவாரத்தில் நடப்பட்டு அவை தற்போது மரங்களாக செழித்து வளர்ந்துள்ளன.

புதுச்சேரியில் 82 ஏரிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இவை குடிநீர் விநியோகத்துக்கும், விவசாயப் பணிகளுக்கும் அடிப்படை ஆதாரமாய் அமைந்து உள்ளன. புதுச்சேரியின் மிகப்பெரிய ஏரியான ஊசுட்டேரி 800 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இதன் மொத்த கொள்ளளவு 540 மில்லியன் கன அடியாகும். தென் பெண்ணையாற்றில் வரும் வெள்ள நீர் பாகூர் ஏரிக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. பாகூர் ஏரியின் பரப்பு 1,762 ஏக்கராகும் இவை புதுச்சேரியின் நிலத்தடி நீர் பாதுகாப்பு, பல்வேறு பறவைகள் சிறு விலங்குகளின் வாழ்விடமாகவும், மற்றும் ஏராளமான மக்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது.

அழிவுக்குள் ஈரநிலம்

மனிதன் மேல் ஈரநிலத்திற்கு உள்ள ஈரம் ஈரநிலத்தில் மனிதனுக்கு இல்லை இதனால் மிகப்பெரிய அழிவை சந்திக்கின்றன. சுற்றுலா தலங்களை உருவாக்குதல், ரியல் எஸ்டேட் தொழில்கள் ஆகியனவும் நமது நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளும், பாராமறிப்பு இன்மையும் இந்த நிலங்களை பாழ்ப்படுத்தி வருகிறது. எனவே இந்த நிலங்களை பாதுகாக்கவும் அதன் பயன்களை மக்களிடம் கொண்டுசெல்லவும் இந்த தினத்தில் உறுதி ஏற்போம்.

ஈர நிலங்களை பாதுகாக்க என்ன செய்யவேண்டும்:-

தாவரப் போர்வையை பாதுகாத்தல் :-
அலையாத்தி தாவரங்களின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்துவதன் மூலம் அவற்றை அழிவிலிருந்து மீட்டுக்கொள்ளலாம். அத்துடன் அழிக்கப்பட்ட தாவரங்களுக்கு பதிலாகவும் கூடுதலாக கடல்தாவரங்களை மீள்நடுகை மூலம் உருவாக்குதல்.

பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிவித்தல் :-
ஈரநிலங்கள் உள்ள பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக அறிவித்து அப்பிரதேசங்களில் ஈரநிலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவோரை சட்டத்தின் முன்நிறுத்துவதன் மூலமும் ஈரநிலப்பகுதிகளைப் பாதுகாக்கலாம்.

நகரக்கழிவுகளை கொட்டுவதைத் தவிர்த்தல்:-
ஈரநிலப்பிரதேசங்களில் நகரக்கழிவுகளை கொட்டுவதை தவிர்த்து தொலைவான இடங்களில் அவற்றை கொட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தோ அல்லது கூட்டு உரம் தயாரிப்பதற்கோ பயன்படுத்தலாம். இதன் மூலம் ஈரநிலப்பகுதிகளில் திண்மக்கழிவுகள் சேர்வதனைக் குறைக்கலாம்.

தொழிற்சாலைகளை வேறுபகுதிகளில் அமைத்தல்:-
ஈரநிலங்கள் உள்ள பகுதிகளில் அமைந்து காணப்படுகின்ற தொழிற்சாலைகளினால் வெளியேற்றப்படுகின்ற கழிவுகள் ஈரநிலங்களில் சேர்வதனைக் கட்டுப்படுத்தவேண்டுமாயின், அத்தகையத் தொழிற்சாலைகளை வேறுபகுதிகளில் அமைத்தல்.

ஈர நிலப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்தவர்களையும் அகற்றி வேறுவழியின்றி குடியிருப்பவர்களுக்கு மாற்று வசிப்பிடவசதி ஏற்படுத்துதல்.

இப்பகுதியில் உள்ள பறவைகள் மற்றும் மண்புழுக்கள், சிறு விலங்குகள், சுரபுன்னை மரங்கள், மற்றும் அரிய தாவரங்களை பாதுகாப்போம்.

No comments:

Post a Comment